search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேச பாதுகாப்பு"

    ரபேல் ரகசிய ஆவணங்களை திருடி வெளியிட்டதால், தேச பாதுகாப்புக்கு அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. #RafaleDeal #SupremeCourt
    புதுடெல்லி:

    ரபேல் போர் விமான பேரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய மனுக்களை சுப்ரீம் கோர்ட் கடந்த டிசம்பர் 14-ந் தேதி தள்ளுபடி செய்தது.

    அந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி, முன்னாள் மத்திய மந்திரிகள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி, வக்கீல் பிரசாந்த் பூஷண் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்தனர். சமீபத்தில் இந்த மனு விசாரணைக்கு வந்த நாளில், ஒரு ஆங்கில பத்திரிகையில் ரபேல் பேரம் குறித்த ரகசிய ஆவணங்கள் வெளியாகின. அதே ஆவணங்கள், சீராய்வு மனுக்களுடனும் இணைக்கப்பட்டுள்ளன.இந்த ஆவணங்கள், ராணுவ அமைச்சகத்தில் இருந்து திருடப்பட்டுள்ளதாக மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தார். பின்னர், “ஆவணங்கள் திருடப்படவில்லை, நகல் எடுக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.

    இந்நிலையில், சீராய்வு மனுவுக்கு மத்திய அரசு சார்பில் பிரமாண பத்திர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், மத்திய அரசு கூறி இருப்பதாவது:-



    மனுதாரர்களின் சீராய்வு மனு பரவலாக புழக்கத்தில் விடப்பட்டுள்ளது. நாட்டின் எதிரிகள் கையிலும் கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால் தேசத்தின் பாதுகாப்பே அபாயத்தில் உள்ளது.

    மனுதாரர்கள் இணைத்துள்ள ஆவணங்கள், தேச பாதுகாப்புக்கு முக்கியமானவை. ரபேல் விமானங்களின் போர்த்திறன் சம்பந்தப்பட்டவை. அவற்றை மத்திய அரசின் அனுமதியோ, ஒப்புதலோ இல்லாமல் நகல் எடுத்து, சீராய்வு மனுவுடன் இணைத்த சதிகாரர்கள், திருட்டு குற்றம் இழைத்துள்ளனர்.

    இச்செயல், நாட்டின் இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும், வெளிநாடுகளுடனான நட்புறவுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த ஆவணங்களை மத்திய அரசு ரகசியமாக வைத்திருந்தது. ஆனால், மனுதாரர்கள் இவற்றை ரகசியமாக வெளியிட்டதன் மூலம், ரபேல் ஒப்பந்தம் தொடர்பான விதிமுறைகளுக்கு குந்தகம் விளைவித்து இருக்கிறார்கள்.

    தேச பாதுகாப்பு மற்றும் ராணுவம் தொடர்பான இந்த விஷயம் குறித்து மத்திய அரசு நடத்திய உள்மட்ட ரகசிய ஆலோசனை பூர்த்தி அடையாமல் இருந்தது. அதை மட்டும் தேர்வு செய்து வெளிப்படுத்தும் உள்நோக்கத்துடன் இந்த ஆவணங்களை பயன்படுத்தி உள்ளனர்.

    இவ்வாறு மத்திய அரசு கூறியுள்ளது.

    இந்த மனு, இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வருகிறது.
    தேச பாதுகாப்புக்காக கடுமையான முடிவுகளை எடுக்க தயங்க மாட்டோம் என்று பிரதமர் மோடி கூறினார். #NationalSecurity #PMModi #India
    புதுடெல்லி:

    டெல்லியில், இந்த ஆண்டுக்கான குடியரசு தின முகாமில் என்.சி.சி. மாணவர்களின் அணிவகுப்பு நிறைவு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு, மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    பிறகு, என்.சி.சி. மாணவர்களிடையே மோடி பேசினார். அவர் பேசியதாவது:-

    இந்தியா, அமைதியை வலியுறுத்தும் நாடு. இருப்பினும், தேச பாதுகாப்பை உறுதி செய்ய கடந்த நான்கரை ஆண்டுகளில் எத்தனையோ நடவடிக்கைகளை எடுத்துள்ளது.



    இனிவரும் நாட்களிலும், தேச பாதுகாப்புக்காக கடுமையான, பெரிய முடிவுகளை எடுக்க அரசு தயங்காது. ஏனென்றால், தேச பாதுகாப்புக்குத்தான் நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம்.

    போர் விமானங்கள் உள்ளிட்ட ராணுவ தளவாடங்கள் வாங்குவது தொடர்பான பாதுகாப்பு திட்டங்கள், கடந்த பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டன. இந்த ஆட்சியில்தான் அத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். அதன்படி, போர் விமானங்கள், ஏவுகணைகள், டாங்கிகள் உள்ளிட்டவை வாங்கப்பட்டுள்ளன.

    நிலத்திலும், நீரிலும், வானிலும் இருந்து அணு ஆயுதங்களை ஏவக்கூடிய சக்தி படைத்த ஒரு சில நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பிடித்துள்ளது. இருந்தாலும், “நாங்களாக போரை தூண்ட மாட்டோம். போரை தூண்டினால், எதிரியை விடமாட்டோம்” என்று நமது படைகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

    புதிய இந்தியாவில் ஊழலுக்கு இடமில்லை. ஊழலில் ஈடுபடுபவர்களை விடமாட்டோம். பணியில் சிரத்தை கொண்டவர்களுக்கு ‘புதிய இந்தியா’ நிறைய வாய்ப்புகளை அளிக்கும்.

    நீங்கள் பிறந்த குடும்பமோ, பொருளாதார சூழ்நிலையோ உங்களது எதிர்காலத்தை தீர்மானிக்காது. உங்கள் திறமை, கடின உழைப்பு, தன்னம்பிக்கை ஆகியவைதான் தீர்மானிக்கும். இந்த அரசு, முக்கிய பிரமுகர்கள் (வி.ஐ.பி.) கலாசாரத்துக்கு முடிவு கட்டி, ‘எல்லோரும் முக்கியம்’ என்ற கலாசாரத்தை அறிமுகப்படுத்தும்.

    கடந்த நான்கரை ஆண்டுகளில் மத்திய அரசு எடுத்த எத்தனையோ முடிவுகளை இளைஞர்கள் ஆதரித்தனர். அரசின் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை அவர்கள் பரப்புவதுடன், எல்லோரும் வாக்களிக்குமாறு செய்ய வேண்டும்.

    இவ்வாறு மோடி பேசினார். #NationalSecurity #PMModi #India
    ×